பிரார்த்தனை.                

 

மழை, மழை, மழை, மழை எங்களுக்கு வேண்டும்.         மழை, மழை, மழை, மழை வேண்டுமென்று நாங்கள் வேண்டுகிறோம்.                                   மழை, மழை, மழை, மழை எங்களுக்கு தேவை.           மழை, மழை, மழை, மழைக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்.                                        ஸ்ரீஅன்னை.                            

எல்லாம் வல்ல இறையே!

 

இறைவனே, ஒவ்வொரு நாளும் உன்னை மேலும் நன்றாக உணர்ந்து உனக்கு நன்றாகப் பணி செய்து வாழ வேண்டும் என்பது ஒன்றே எனது உண்மையான விருப்பம் ஆகும். வெளிப்புறச் சூழ்நிலைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை; நாளை நமக்கு என்ன நேரிடும்? என்பது பற்றியும் எனக்கு அக்கறை இல்லை.

 

ஒரே ஒரு விஷயம்தான் எனக்கு முக்கியமாகப் படுகிறது என் உள்ளமும் அதையே தீவிரமாய் நாடுகிறது. உன்னை மேலும் நன்றாக உணர்ந்து கொள்வதன் மூலம் உனக்கு மேலும் நன்றாக பணி புரிய வேண்டும் என்பதே அது.

 

வெளிப்புறச் செயல்பாடுகள் எல்லாம் இந்த ஒரே ஒரு இலக்கை நோக்கியே செல்ல வேண்டும். அது வெளிப்புற நிகழ்ச்சிகள் மேல் நாம் கொண்டு இருக்கும் பற்றைப் பொறுத்து அமைகிறது. ஒவ்வொரு விஷயத்திலும் எங்களது உள்ளம் உன்னை இடைவிடாமல் தேடியபடி  இருக்க வேண்டும்.

 

நமது ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் உன்னை மேலும், மேலும் நன்கு வெளிப்படுத்த முயல வேண்டும். அதில்தான் நமது பரம சாந்தி; அதில்தான் நமது முழு நிம்மதியும், பரம திருப்தியும்; அது ஒன்றில் தான் வாழ்க்கை மலர்ந்து, பெருகிப், பரவி எந்த சூறாவளியாலும் தகர்க்க முடியாத கம்பீரமான அலைகளாய் கரை புரண்டு மோத முடியும்.

 

எமது தலைவனே, நீயே எங்களுக்கு காப்பாளன், எங்களது இன்பம் எல்லாமே நீதான், பேரொளி வீசும் எங்களது ஒளியும் நீயே, தூய்மையான அன்பு நீ, எங்கள் சக்தியும் நீயே, எங்களது விருப்பமும் நீதான், எங்கள் உயிரும் நீ, எங்களது ஆன்ம மெய்பொபொருளும் நீயே.

 

இறைவா! பக்தியும், மகிழ்ச்சியும் பொங்கி வழிந்திட உன்னைப் போற்றியவண்னம் பணிந்து வணங்குகிறேன்.

 

ஸ்ரீஅன்னை.

12 மார்ச் 1914, ஜெனிவா. தியானமும் பிரார்த்தனையும்.

 

 

சிந்தனைப் பொறிகள்.

 

பரிபூரணமான நேர்மை, இறைவன்பால் நம்பிக்கை, பக்தி அல்லது நன்றி உணர்ச்சி, துணிவு அல்லது ஆர்வம், பொறுமை அல்லது விடா முயற்சி, இவையே ஒருவன் ஆன்மிக வாழ்வில் வெற்றி அடையத் தேவையான அகப் பண்புகள் ஆகும்.          ஸ்ரீஅன்னை. 

 

பொறுமை, விடா முயற்சி.

 

நேர்மை, நம்பிக்கை, பக்தி ஆர்வம் ஆகியவற்றுடன் ஐந்தாவதாக பொறுமை எனும் நற்பண்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வாழ்க்கையில் துன்பங்களை எதிர்கொள்ள இயலாவிட்டால் உங்களால் முன்னேற முடியாது.

 

துன்பங்களை எதிர்கொண்டு அவைகளுக்கு தீர்வு காண இயலாமலே யே மேலே சென்று கொண்டு இருந்தீர்களானால், உங்களுடைய குறை பாடுகளின் விளைவாக உங்களுக்குக் கிடைக்கும் உதைகளைச் சரிவரப் புரிந்து கொண்டு அவற்றைத் திருத்திக் கொள்ளாமல் அவற்றை அனுப வித்துக் கொண்டு இருந்தால், வாழ்க்கை எனும் விளையாட்டில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்.

 

விடாமுயற்சி என்பது நாம் வெற்றி பெறுவதற்கு உதவும் ஒரு கருவி ஆகும். தேவையானால் ஆயிரம் முறை ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும். அதற்கான மனஉறுதி நமக்கு வேண்டும். ''எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்தேனே, முதலில் இருந்து திரும்பவும் தொடங்க வேண்டுமா? என்று சிலர் கேட்பது உண்டு.

 

இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல, நீ மீண்டும் மீண்டும் நூறு முறை, இருநூறு முறை ஏன் ஆயிரம் முறை கூடச் செய்ய வேண்டி வரும். ஓரடி எடுத்து வைத்துவிட்டு எல்லாம் சரியாகி விட்டது'' என்று நினைப்பாய், ஆனால், அதே பிரச்சனை சில நாள் கழித்து வேறு வடிவில் கிளைத்து வரும். நீ தீர்ந்து விட்டதாக நினைத்த அதே பிரச் சனை மீண்டும் மீண்டும் வந்தவாறே இருக்கும்.

 

''ஓராயிரம் முறை என்றாலும் விடாமல் நான் எதிர் கொள்வேன், மீண்டும் மீண்டும் முயல்வேன்'' என்று திட உறுதியுடன் இல்லாவிட்டால் யோக சாதனை செய்ய இயலாது.

 

அழகான யோக அனுபவம் ஒன்று ஏற்படும்போது, ''ஆஹா'' என்று அனைவரும் பூரித்துப் போவார்கள். ஆனால் அவ்வனுபவம் சில நாள் தங்கி இருக்கும். பிறகு அது குறையத் துவங்கி மறைந்து போகும்.   (யோக அனுபவங்கள் ஒரேயடியாக மறைந்து போவது இல்லை. திரை மறைவில் போய் இருக்கும் என்றுதான் ஸ்ரீஅன்னை சொல்கிறார். விடாமுயற்சியோடு, பொறுமையாக சாதனை செய்பவனுக்கு அந்த அனுபவங்கள் திரும்ப வரும்.)

 

அதேவேளையில் ஒரு சாமானியமான, சுவை இல்லாத ஏதோ ஒரு நிகழ்ச்சி எதிர்படும். அது உனது பாதைக்கு குறுக்கே தடையாக நிற்கும். நீ உடனடியாக அங்கலாய்ப்பாய், ''மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டுமா? அப்படியானால் அவ்வனுபவம் ஏற்பட்டதன் பயன் என்ன?

 

ஏன் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்? முன்னர் முயற்சி செய்து வெற்றி கண்டு விட்டேன், இப்போது நான் எதுவுமே செய்யாதது போல மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்றால்...? என்று கேட்கும் போதே உனக்கு விடாமுயற்சி இல்லை என்பதை இது நிரூபிக்கிறது.

 

விடாமுயற்சி ஒருவனுக்கு இருந்தால், ''அதனால் என்ன? நல்லது, நான் மறுபடியும் தொடங்குவேன், தேவைப்பட்டால் ஆயிரம் முறை, பத்தாயிரம் முறை ஏன் இலட்சம் தடவை கூட முயற்சி செய்வேன். என்னை இடையில் தடுத்து நிறுத்துவதற்கு எந்த சக்தியாலும் முடியாது'' என்று தொடர்ந்து முயலுவான். 

 

இதுதான் தேவையானது, மிகமிகத் தேவையான நிலை. ஸ்ரீஅன்னை.